திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின


திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 14 Jan 2021 5:23 AM GMT (Updated: 14 Jan 2021 5:23 AM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கன மழையால் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியதால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்ளடத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருகெடுத்து ஓடியது. அனைத்து சாலைகளும் பழுதடைந்த விபத்தினை ஏற்படுத்தும் வகையில் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி அனைத்து நகர்களில் மழை நீர் வடிய வாய்ப்பு இன்றி குளம் போல் தேங்கி நிற்கிறது. இதே போல் தாழ்வான பகுதிகள் தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் மழை நீருடன், சாக்கடை நீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே அறுவடை செய்த நெல்லை கொண்டு புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடுவது என்பது தான் வழக்கம். ஆனால் நிவர், புரெவி புயல் மழை பாதிப்பினை தொடர்ந்து வரலாறு காணாத அளவில் ஜனவரி மாதத்திலும் கன மழை பெய்வதால் அறுவடை பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனால் புத்தரிசி பொங்கல் என்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

1 லட்சத்து 30 ஆயிரம் நெற்பயிர்கள் மூழ்கின

திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 எக்டேர் பரப்பளவில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கன மழையினால் பாதிக்கப்பட்டு பயிர்களுக்கு நிவாரணம அறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் மழை தொடந்து பெய்வதால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகி வருகிறது. இதனால் அறுவடை திருநாளை கொண்டாட முடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பரவாக்கோட்டை, உள்ளிக்கோட்டை, ஆலங்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, காரிக்கோட்டை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதியில் சிறு, குறு விவசாயிகள் அதிகம் சம்பா சாகுபடி செய்திருந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பால் கவலை அடைந்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து இருப்பதாகவும், இதனை ஈடு செய்ய என்ன செய்வது என தெரியாமல் வேதனை அடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மழை அளவு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- குடவாசல்-87, நன்னிலம்-76, வலங்கைமான்-66, மன்னார்குடி-63, திருவாரூர்-53, நீடாமங்கலம்-48, முத்துப்பேட்டை-48, பாண்டவயாறு தலைப்பு-45, திருத்துறைப்பூண்டி-34 என பதிவாகியுள்ளது. இதில் அதிகப்பட்சமாக குடவாசலில் 87 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.3

Next Story