238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 14 Jan 2021 6:25 AM GMT (Updated: 14 Jan 2021 6:25 AM GMT)

238 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை, 

கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசியதாவது:-

கோவை மாவட்டத்தில் 2020-21 கல்வி ஆண்டில் 6,961 மாணவர் களுக்கும், 10,271 மாணவிகளுக்கும் ரூ.6.78 கோடியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் 112 மாணவர்கள், 126 மாணவியர்களுக்கும், என மொத்தம் 238 மாணவ- மாணவிகளுக்கு ரூ.9.39 லட்சத்தில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள்

கட்டுமான தொழிலாளர்கள் தைப்பொங்கல் திருநாளை சிறப்புடன் கொண்டாடும் வகையில், முதல்முறையாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 42, 737 கட்டுமான தொழிலாளர் களுக்கு ரூ.3.19 கோடியில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

அதனைத்தொடர்ந்து, மகளிர்திட்டம் சார்பில் 2 மகளிர் சுய உதவிக்குழு க்களுக்கு ரூ.12 லட்சத்தில் வங்கி கடன், 12 மகளிர் சுய உதவி க்குழுக்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பில் சுழல் நிதியும், 5 சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வங்கி கடன் உதவியும் என மொத்தம் ரூ.13.70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

இதில் கலெக்டர் ராஜாமணி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லீலாவதி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருஞானசம்பந்தம், தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story