மின்கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் பலி: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி


மின்கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் பலி: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 15 Jan 2021 3:07 AM GMT (Updated: 15 Jan 2021 3:07 AM GMT)

தஞ்சை அருகே மின்கம்பி மீது பஸ் உரசியதில் 4 பேர் பலியான சம்பவத்தில் யார் தவறு செய்து இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெகராஜ் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்ட முடிவின்படி, தடுப்பூசி பணிகள் செயல்படுத்தப்படும். தஞ்சாவூரில் தனியார் பஸ் மின்கம்பியில் உரசியதில் 4 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.

கூட்டணி பற்றி பேசவில்லை

அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. மழை பெய்ததால் மணல் திட்டு மீது பஸ் ஏறி இறங்கியபோது, கம்பி உரசியதில் பயந்து வெளியே குதித்ததால் உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மின்சார வாரியம் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் சந்திப்பு குறித்த செய்தியை, அவரே தெளிவாக டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார். கூட்டணி பற்றி பேசவில்லை எனவும் அவர் கூறி உள்ளார். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story