திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்


திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
x

எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தில் பேச்சுவார்த்தையை மீறியதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

கோவை இருகூரில் இருந்து பெங்களூரு தேவனகொந்தி வரை ஐ.டி.பி.எல். திட்டம் என்ற பெயரில், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள வேளாண் நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் செயல்படுத்த முனைந்து வருகிறது.

இந்த குழாய் பாதைக்காக நில எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. வேளாண் நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் அமைத்தால், விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

தற்காலிகமாக ஒத்திவைப்பு

கெயில் திட்டத்தை சாலையோரமாகக் கொண்டு செல்ல அன்றைய முதல்வர் ஜெயலலிதா 2013-ம் ஆண்டு ஆணையிட்டத்தைப் போல், தற்போதைய தமிழக அரசும் ஐடிபிஎல் திட்டத்தை சாலையோரமாக அமைக்க ஆணையிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 15-ந்தேதி முதல் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களிலும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் கூட்டமைப்பு தொடங்கியது.

இதையடுத்து கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து அந்தந்த மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு செய்தது. அதன்படி திருப்பூர் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, தமிழக அரசு ஐடிபிஎல் திட்டம் குறித்து மறு அறிவிப்பு வரும் வரை எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என்ற பேச்சுவார்த்தையின் படி போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

காத்திருப்பு போராட்டம்

இந்நிலையில் காங்கேயம் வட்டம் படியூர், சிவன்மலை, கீரனூர், மறவாபாளையம் கிராம விவசாயிகளை பேச்சுவார்த்தையை மீறி வரும் 19-ந் தேதி காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு ஆணைகள் திட்ட அலுவலர் அனுப்பி உள்ளார். இது அரசின் மீது விவசாயிகளுக்கு உள்ள நம்பகத் தன்மையை பாதிக்கும். காங்கேயத்தில் நடைபெறும் இந்த விசாரணை நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இத்திட்டத்தை சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் அமைப்பினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளருமான ஆர். குமார், அலகுமலை பாலசுப்பிரமணியம், ஜெயபிரகாஷ், முத்துராமலிங்கம், வழக்கறிஞர்கள் ஏசையன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன், சண்முகசுந்தரம், பழ.ரகுபதி திமுக, கொமதேக மற்றும் உழவர் உழைப்பாளர் கட்சி பிரமுகர்கள் என பலர் பங்கேற்றனர்.

மனு

அப்போது மேற்கண்ட விஷயங்களை வலியுறுத்தி கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 19-ம் தேதி நடைபெற இருந்த விசாரணை ரத்து செய்யப்படுகிறது என அறிவித்தார். மேலும் இது தொடர்பான அறிவிப்பை காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் ஒட்டப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை விவசாயிகள் முடிவுக்கு கொண்டு வந்தனர்.

Next Story