சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூசத்தேரோட்டம் ஒரு நாள் மட்டும் நடத்த முடிவு


சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூசத்தேரோட்டம் ஒரு நாள் மட்டும் நடத்த முடிவு
x
தினத்தந்தி 15 Jan 2021 6:08 AM GMT (Updated: 15 Jan 2021 6:08 AM GMT)

காங்கேயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டம் 3 நாள்களுக்குப் பதிலாக ஒரு நாள் மட்டுமே நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கேயம், 

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி மலைக்கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் மலைக்கோவிலில் உள்ள மண்டபத்தில் நேற்று மதியம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தின் முடிவில், இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலின் உதவி ஆணையர் ஜெ.முல்லை அறிவித்தார்.

இதன்படி, சிவன்மலை முருகன் கோவிலில் வருடம் தோறும் 3 நாட்கள் நடைபெறும் தைப்பூச தேரோட்டம், இந்தவருடம் தமிழக அரசின் கொரோனா ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, வருகிற 28-ந்தேதி ஒரு நாள் மட்டுமே தேரோட்டம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்றம்

மேலும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிவது உறுதி செய்யப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டு, வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். கோவிலுக்குள் பூஜை பொருட்களைக்கொண்டு வருவதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்களுக்கு வழங்கப்படும் விபூதி, குங்குமம் ஆகியன பாக்கெட்டுகளில் மட்டுமே வழங்கப்படும்.

மலைக்கோவிலில் வருகிற 22-ந்தேதி தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் மற்றும் கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. தைப்பூச திருவிழா நாட்கள் முழுவதும் அனைத்து தைப்பூச மண்டபக் கட்டளைகளும் மலைமேல் உள்ள உற்சவருக்கு மட்டுமே நடைபெறும்.

பக்தர்களுக்கு அனுமதிஇல்லை

திருவிழாவின் போது அபிஷேகம் பார்ப்பதற்கு கட்டளைதாரர்களுக்கு அனுமதியில்லை. தேரோட்டத்திற்கு முந்தைய நாளான ஜனவரி 27-ந்தேதி சுவாமி மலைக்கோவிலில் இருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் எழுந்தருளுவார்.

இங்கு நடைபெறும் திருக்கல்யாணம் மற்றும் மகா அபிஷேகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. தேரோட்டத்தின் போது தேரடியில் முக்கிய நபர்களுக்கு மாலை அணிவித்து, பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்படும். இம்முறை இந்த மரியாதைகளுக்கும் அனுமதியில்லை.

அன்னதானம் இல்லை

தைப்பூச திருவிழாவின் முக்கிய நாட்களான ஜனவரி 28, 29, 30 ஆகிய 3 நாட்களும் அடிவாரத்தில் மலையைச்சுற்றி காவடிக்குழுவினர் குடில் அமைத்து தங்குவதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் அனுமதியில்லை. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச்செல்வதற்கு கோவில் நிர்வாகம் சார்பில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும். தவிர, தனியார் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை. இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி உண்டு எனத்தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் காங்கேயம் தாசில்தார் சிவகாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ், காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு உள்ளிட்ட அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story