பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 15 Jan 2021 6:23 AM GMT (Updated: 15 Jan 2021 6:23 AM GMT)

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பவானிசாகர் அணையாகும்.

நீர் வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவதாலும் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 627 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.39 அடியாக இருந்தது. நேற்று மாலை 5 மணிக்கு பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 4767 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.56 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கனஅடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

Next Story