மாமல்லபுரத்தில் பொங்கல் விழா
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் பொங்கல் விழா நடந்தது.
மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி ராஜாராமன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் கலந்து கொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் பலர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.
விழாவில் கம்பு சுற்றுதல், வாள் சுற்றுதல், சிலம்பம், நெருப்பு மூட்டி ஓடு உடைத்தல் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள், பரதநாட்டியம், தப்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர் விடுதிகளில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் சிலர் உறியடி பானை உடைக்கும் போட்டியில் கலந்து கொண்டு கண்களை கட்டிக்கொண்டு உறியடி பானை உடைத்தனர். விழாவில் கலந்து கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராகவன், மூத்த சுற்றுலா வழிகாட்டிகள் எம்.கே.சீனிவாசன், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story