மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடம் இல்லை; பயணிகள் கடும் தவிப்பு


மதுரையில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலில் கூட இடம் இல்லை; பயணிகள் கடும் தவிப்பு
x
தினத்தந்தி 16 Jan 2021 10:43 PM GMT (Updated: 16 Jan 2021 10:43 PM GMT)

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் காத்திருப்போர் பட்டியலும் முடிந்து முன் பதிவு செய்ய முடியாமல் ரெயில் பெட்டிகள் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

பயணிகள் கூட்டம்
மதுரை ரெயில்வே கோட்டத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால், தற்போது 60 சதவீத ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தென் மாவட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவு காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியலில் கூட முன்பதிவு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று சென்னை புறப்பட்ட தென் மாவட்ட ரெயில்கள் அனைத்திலும் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியலில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

குடும்பத்துடன் முன்பதிவு செய்தவர்களில் பாதி பேருக்கு இருக்கை உறுதி செய்யப்பட்டது. பலருக்கு இருக்கை உறுதி செய்யப்படவில்லை. இதனால், சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் ரெயில் பெட்டிகள் முழுவதும் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

காத்திருப்போர் பட்டியல் முடிந்தது
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை செல்லும் தென்மாவட்ட ரெயில்களில் அனைத்து வகுப்புகளிலும் காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இடம் பெற்றுள்ளனர். அதன்படி, மதுரையில் இருந்து சென்னை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் 151 பயணிகளும், குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டியில் 58 பயணிகளும் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் (வ.எண்.06128) 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியிலும், தூங்கும் வசதி பெட்டியிலும் முன்பதிவு செய்ய முடியாத அளவுக்கு காத்திருப்போர் பட்டியலும் நிரம்பியுள்ளது. தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.02614) இருக்கை வசதி குளிரூட்டப்பட்ட பெட்டியில் 64 பேரும், எக்சிகியூடிவ் வகுப்பில் 10 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கொல்லம் எக்ஸ்பிரசில் (வ.எண்.06102) 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும், தூங்கும்வசதி பெட்டியில் 92 பேரும், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 36 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நாகர்கோவில்-சென்னை சிறப்பு கட்டண ரெயிலில் (வ.எண்.06092) இருக்கை வசதி பெட்டியில் 99 பேரும், தூங்கும் வசதி பெட்டியில் 109 பேரும், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 32 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

சமூக இடைவெளி?
பாண்டியன் எக்ஸ்பிரசில் (வ.எண்.02638) இருக்கை வசதி பெட்டியில் 120 பேரும், தூங்கும் வசதி பெட்டியில் 244 பேரும், 3-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியில் 49 பேரும், பொதிகை எக்ஸ்பிரசில் (வ.எண்.02662) இருக்கை வசதி பெட்டிகளில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும், தூங்கும் வசதியில் 158 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 31 பேரும், கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் (வ.எண்.02634) இருக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்ய முடியாத நிலையும், தூங்கும் வசதியில் 147 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 43 பேரும், நெல்லை எக்ஸ்பிரசில் (வ.எண்.02632) இருக்கை வசதியில் 48 பேரும், தூங்கும் வசதியில் 149 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 35 பேரும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

மதுரை-சென்னை குளிரூட்டப்பட்ட ரெயிலில் (வ.எண்.06020) 3-அடுக்கில் 40 பேரும், 2-அடுக்கில் 22 பேரும், முத்துநகர் எக்ஸ்பிரசில் இருக்கை வசதியில் 99 பேரும், தூங்கும் வசதியில் 128 பேரும், குளிரூட்டப்பட்ட பெட்டியில் 14 பேரும், அனந்தபுரி எக்ஸ்பிரசில் (வ.எண்.06724) இருக்கை வசதியில் 115 பேரும், தூங்கும் வசதியில் 128 பேரும், குளிரூட்டபட்ட பெட்டியில் 47 பேரும் காத்திருப்போர் 
பட்டியலில் உள்ளனர். முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் முன்பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. செந்தூர் எக்ஸ்பிரசில் (வ.எண்.06106) இருக்கை வசதி மற்றும் தூங்கும் வசதி பெட்டிகளில் முன் பதிவு செய்ய முடியாத நிலையும் உள்ளது. இதனால், இன்று தென் மாவட்ட ரெயில்களில் சென்னை செல்லும் பயணிகள் என்ன நிலைமைக்கு ஆளாகப்போகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வாறு ரெயில் பெட்டிக்குள் பின்பற்றப்பட உள்ளது என்பதும் தெரியாமல் பயணிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Next Story