திருப்பத்தூர் அருகே எருது விடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 31 பேர் காயம்; முககவசம் அணியாத விழா குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


தோக்கியம் கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் காளை சீறிப்பாய்ந்து ஓடிய காட்சியை காணலாம்.
x
தோக்கியம் கிராமத்தில் எருது விடும் திருவிழாவில் காளை சீறிப்பாய்ந்து ஓடிய காட்சியை காணலாம்.
தினத்தந்தி 17 Jan 2021 8:45 PM GMT (Updated: 17 Jan 2021 7:02 PM GMT)

திருப்பத்தூர் அருகே காளைவிடும் திருவிழாவில் மாடுகள் முட்டி 31 பேர் காயமடைந்தனர். முககவசம் அணியாத விழாக்குழுவினருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

எருதுவிடும் திருவிழா
திருப்பத்தூர் அருகே தோக்கியம் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெற்றது. விழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 120 காளைகள் பங்கேற்றன. எருதுகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. விழா தொடங்குவதற்கு முன்பு காளைகளை, டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 3 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

எருது விடும் விழாவுக்கு டி.வி.குள்ளப்ப கவுண்டர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டியை மண்டல தாசில்தார் ரேவதி கிராமநிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், மகேஷ், மற்றும் வருவாய்த் துறையினர் கண்காணித்தனர். கந்திலி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

31 பேர் காயம்
எருதுகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டதும் சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த, காளைகள் மீது கைகளை வைத்து தட்டினார்கள். அப்போது காளைகள் முட்டியதில் 31 பேர் காயமடைந்தனர்.

குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் பரிசு மற்றும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. முககவசம் அணியாத விழாக் குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story