கடத்தூர் அருகே கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை உறவினர்கள் சாலை மறியல்


கடத்தூர் அருகே கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Jan 2021 2:05 AM GMT (Updated: 18 Jan 2021 2:05 AM GMT)

கடத்தூர் அருகே கட்டிட மேஸ்திரி அடித்து கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடத்தூர், 

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அஸ்தகிரியூர் கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி குமுதவள்ளி என்ற மனைவியும், கோகுல் (7), லோகேஸ் (5) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி முனியப்பன் கடத்தூரில் கரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு முனியப்பன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றார். புதுரெட்டியூர் அருகே சென்றபோது எதிரே முத்தனூரைச் சேர்ந்த விவேக், முருகன், ரகுபதி, விஜி ஆகியோர் காரில் வந்துள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிள் மீது கார் மோதுவது போல் வந்துள்ளது.

பரிதாப சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த முனியப்பன் காரில் வந்தவர்களை கண்டித்துள்ளார். இதனால் காரில் வந்தவர்களுக்கும், முனியப்பனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விவேக் உள்ளிட்ட 4 பேரும் முனியப்பனை கல்லால் தாக்கி விட்டு சென்று விட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த முனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அவருடைய வீட்டில் கொண்டு வந்து விட்டனர். பின்னர் சிறிது நேரத்தில் முனியப்பன் இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடத்தூர் போலீசார் விரைந்து முனியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் முனியப்பனின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கடத்தூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி, இன்ஸ்பெக்டர் ஜெய்சல் குமார் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் அவர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கட்டிட மேஸ்திரி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story