பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய கணவன்-மனைவி கைது
நாமக்கல்லில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூபாய் நோட்டுக்குள் வெள்ளை தாள்களை வைத்து ஏமாற்றிய கணவன்-மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது43). டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவரது பாருக்கு மது குடிக்க வந்த சேந்தமங்கலத்தை சேர்ந்த டிரைவர் பாஸ்கரன் (26), மணிமாறன் (45) ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நபர்கள் கணக்கில் வராத கருப்பு பணம் நிறைய வைத்திருப்பதாகவும், அதை வெள்ளை பணமாக மாற்ற இரட்டிப்பு செய்து தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந் காலையில் சேந்தமங்கலம் சாலையில் உள்ள ரெயில்வே பாலம் அருகே வந்தபோது காரில் சேந்தமங்கலத்தை சேர்ந்த கண்ணகி, முருகன், விக்ரம் ஆகியோர் இருப்பதாகவும், பணம் இருந்தால் கொடு, இரட்டிப்பாக்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளனர். இதை உண்மை என நம்பி தன்னிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை வெங்கடேஷ் காரில் இருந்த விக்ரமிடம் கொடுத்து உள்ளார்.
கணவன்-மனைவி கைது
அதற்கு பதிலாக காரில் இருந்த நபர்கள் 100 ரூபாய் கட்டு கொடுத்து உள்ளனர். அப்போது போலீஸ் வருவதாக கூறி அங்கிருந்து அனைவரும் தப்பி சென்று விட்டனர். வெங்கடேஷ் அந்த 100 ரூபாய் கட்டை பிரித்து பார்த்தார். அப்போது அதில் மேல் பகுதியில் மூன்று 100 ரூபாய் நோட்டுகளும், அடிப்பகுதியில் இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மீதமுள்ள அனைத்தும் வெள்ளை தாள்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பாஸ்கரன், மணிமாறன் ஆகிய இருவரை கைது செய்தார்.
கண்ணகி, விக்ரம், முருகன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று நாமக்கல் பொன்விழாநகரை சேர்ந்த உறவினர் ஒருவரின் வீட்டிற்கு வந்த முருகன் (54), இவரது மனைவி கண்ணகி (46) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய விக்ரமை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story