பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் பிணமாக மிதந்த மெக்கானிக் போலீசார் விசாரணை


பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் பிணமாக மிதந்த மெக்கானிக் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Jan 2021 5:27 AM GMT (Updated: 18 Jan 2021 5:27 AM GMT)

பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் பிணமாக மிதந்த மெக்கானிக் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்லடம், 

பல்லடம் அருகே காரணம்பேட்டை-சோமனூர் மெயின் ரோட்டில் உள்ள பாறைக்குழி தண்ணீரில் 50வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக மிதப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து, அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பாறைக்குழி தண்ணீரில் பிணமாக மிதந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் சென்னை மேற்குதாம்பரம், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 47), என்றும், இவர் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் தங்கிக்கொண்டு கல் குவாரிகளில் பாறைகளை வெட்ட பயன்படுத்தும் எந்திரத்தின் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

மேலும் அவர் பாறைக்குழி தண்ணீரில் தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story