கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கில் ஊழல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கில் ஊழல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 Jan 2021 2:26 AM GMT (Updated: 19 Jan 2021 2:26 AM GMT)

கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்று தர்மபுரி அருகே நடந்த மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணையும் விழாவில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

தர்மபுரி,

தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் உள்பட 750 பேர் தி.மு.க.வில் இணையும் விழா தர்மபுரி அருகே பாப்பாரப்பட்டி கூட்டு ரோட்டில் உள்ள லட்சுமி நாராயணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் இன்பசேகரன் எம்.எல்.ஏ., டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சின்னசாமி, மனோகரன், வேடம்மாள், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைய சங்கர் வரவேற்றார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களை வரவேற்று மு.க.ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க.வில் இணைந்துள்ள அனைவரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தமிழகத்தில் கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என நடக்கும் ஊழல் அ.தி.மு.க. அரசுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம்.

விரட்டியடிக்க வேண்டும்

கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவிய நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியிலும் இந்த அரசு கொள்ளையடித்து உள்ளது. கருவிகள் வாங்குதல், முககவசம், பிளீச்சிங் பவுடர், துடைப்பம் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது. எனவே இந்த ஊழல் ஆட்சியை விரட்டியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

கூட்டத்தில் கடத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், தர்மபுரி ஒன்றிய செயலாளர் டாக்டர் பிரபு ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மெனசி தாமோதரன், கண்மணி லெனின், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் ஆர்.எம்.ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மாவதி சரவணன், விஜயாசங்கர், அமுதா ஆதிமூலம், காந்தி, சிந்தல்பாடி கிளை செயலாளர் ஆதம் டி.எக்ஸ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார், பட்டுகோணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ஒப்பந்ததாரர் சக்திவேல், பாடி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன், தர்மபுரி நகர பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ஒன்றிய செயலாளர் சேட்டு நன்றி கூறினார்.

Next Story