சொத்துக்காக உறவினர்கள் கொலை மிரட்டல்: பச்சிளம் குழந்தையுடன் வந்து கலெக்டரிடம் பெண் புகார்


சொத்துக்காக உறவினர்கள் கொலை மிரட்டல்: பச்சிளம் குழந்தையுடன் வந்து கலெக்டரிடம் பெண் புகார்
x
தினத்தந்தி 20 Jan 2021 9:19 PM GMT (Updated: 20 Jan 2021 9:19 PM GMT)

சொத்துக்காக உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக பச்சிளம் குழந்தையுடன் வந்து, கலெக்டரிடம் பெண் புகார் அளித்துள்ளார்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை மூவலூர் காலனித்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி சிவப்பிரியா. இவரது கணவர் கார்த்திக் 5 ஏக்கர் புஞ்சை நிலத்தில் விவசாயம் செய்துவந்ததோடு, சொந்தமாக லாரி வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். கார்த்திக் மற்றும் அவரது சித்தப்பா மகன் கண்ணன், கண்ணனின் மனைவி மணிமேகலை, வாசு ஆகியோரிடையே ஏற்கெனவே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 22-ந் தேதி கண்ணன் தரப்பினர் தான் கர்ப்பிணியாக இருந்தபோது தாக்கியதாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிவப்பிரியா புகார் அளித்துள்ளார்.

சிவப்பிரியாவுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 7-ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அன்றைய தினம் கார்த்திக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கார்த்திக்கின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்த சிவப்பிரியாவுக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பின்னர் சிவப்பிரியா வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், கணவரின் லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை காணாமல் போயிருந்தன.

மீண்டும் புகார் மனு

இதுதொடர்பாக தனது கணவர் கார்த்திக்கை, கண்ணன் தரப்பினர் கொலை செய்து, அதனை தற்கொலை என்று மாற்றி, அடக்கம் செய்துவிட்டதாகவும், தனது உடைமைகளை எடுத்துச் சென்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 11-ந் தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிவப்பிரியா புகார் அளித்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று சிவப்பிரியா தனது 3 வயது மகள் மற்றும் பச்சிளம் குழந்தையுடன் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் மீண்டும் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தனது கணவரின் உறவினர்கள் கணவரின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காமல், தன்னையும், தனது குழந்தைகளையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கும்படியும் கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

Next Story