மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்; கருவிகளுக்கு சிக்னல் கிடைக்கவில்லை: அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதி


மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்; கருவிகளுக்கு சிக்னல் கிடைக்கவில்லை: அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் அவதி
x
தினத்தந்தி 20 Jan 2021 11:15 PM GMT (Updated: 20 Jan 2021 11:15 PM GMT)

ரே‌‌ஷன் கடைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் கருவிகளுக்கு சிக்னல் கிடைக்காத நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் 1,185 ரே‌‌ஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 941 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொருட்களை வாங்குவதற்கு குடும்ப அட்டையை கொண்டு சென்றால்போதும், பணியாளர்கள் வைத்துள்ள கருவியின் மூலம் குடும்ப அட்டையில் உள்ள பார்கோடுவை ஸ்கேனின் செய்துவிட்டு அத்தியவசிய பொருட்களை பெற்று கொண்டு வந்துவிடலாம். இதனால் நீண்டநேரம் பொருட்களை வாங்க காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது.

இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே ரே‌‌ஷன் கார்டு என்ற திட்டத்தின் அடிப்படையில் ரே‌‌ஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தியபோது அதற்கான கருவிகளில் கோளாறு ஏற்பட்டதாலும், தொலைத்தொடர்பு சிக்னல் கிடைக்காததாலும் பொருட்கள் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தற்காலிகமாக நிறுத்தம்

பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருந்தும் பொருட்களைப் பெற முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தநிலையில் பயோமெட்ரிக் முறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு பழையபடி ரே‌‌ஷன் கார்டின் பார்கோர்டு மூலம் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புகளும் இதே முறையில் தான் வழங்கப்பட்டது. இதனால் நீண்டநேரம் யாரும் காத்திருக்காமல் உடனுக்குடன் பரிசு தொகுப்புகளை பெற்று சென்றனர். பொங்கல் முடிந்தநிலையில் மீண்டும் ரே‌‌ஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் திட்டத்தின்படி, ரே‌‌ஷன் கார்டுகளில் பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே, ரே‌‌ஷன் கடைக்குச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னணு கருவியில் கைரேகையைப் பதிவு செய்வது அவசியமாகும்.

பொதுமக்கள் தவிப்பு

இந்த நடைமுறைக்கு இணையதள வசதி இருப்பதுடன், தொலைத்தொடர்பு சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும். ஆனால், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை நிலவியது. இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கணபதிநகர், காவேரி சிறப்பு அங்காடி வளாகம், ரெயிலடி, நாஞ்சிக்கோட்டை, வேங்கராயன்குடிகாடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் என மாவட்டம் முழுவதும் உள்ள ரே‌‌ஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். எப்போது எந்திரம் செயல்படுமோ? என பொதுமக்கள் ரே‌‌ஷன் கடைகளின் முன்பு நீண்டநேரம் காத்திருந்தது பரிதாபமாக இருக்கும். குறிப்பாக பெண்களும், வயதானவர்களும் அமருவதற்கு கூட இடவசதி இன்றி சாலையோரத்தில் அமர்ந்து இருந்தனர். நீண்டநேரம் காத்திருந்தும் பொருட்களை வாங்க முடியாததால் பலர், வெறும் கைகளுடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர். பலர், ரே‌‌ஷன் கடை பணியாளர்களிடம் தகராறு செய்தனர்.

பொருட்களை பெற முடியாத நிலை

தங்கள் கடைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் தகவல் தெரிவித்தனர். ரே‌‌ஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவுக்கு இருப்பு இருந்தாலும், அவற்றை பொதுமக்கள் உடனடியாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வழங்கல்துறை அதிகாரிகள் கூறும்போது, 2 நாட்களாக இந்த பிரச்சினை நிலவுகிறது. சர்வரை வேகமாக செயல்பட வைக்கும் பணி நடப்பதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக டெக்னிக்கல் என்ஜினீயர்கள் தெரிவித்துள்ளனர். பயோமெட்ரிக் முறையை தவிர மாற்று ஏற்பாடு செய்யவில்லை. மாநகர பகுதிகளில் ரே‌‌ஷன் கடைகள் செயல்படும் நேரத்தை அதிகரித்துள்ளோம். போக, போக பிரச்சினை சரியாகும் என்றனர். பயோமெட்ரிக் எந்திரத்தில் பலரும் கைரேகையை பதிவு செய்வதால், கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதாக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Next Story