கிராமங்களில் விவசாய ஆர்வலர் குழு அமைக்க வேண்டும் - வேலூர் கலெக்டர் பேச்சு


கிராமங்களில் விவசாய ஆர்வலர் குழு அமைக்க வேண்டும் - வேலூர் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2021 5:34 PM GMT (Updated: 21 Jan 2021 5:34 PM GMT)

கிராமங்களில் ஒரே பயிரினை சாகுபடி செய்யும் விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாய ஆர்வலர் குழு அமைக்க வேண்டும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் பண்ணை எந்திர விற்பனையாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய மற்றும் அரசு திட்டங்கள்) ஸ்டீபன் ஜெயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் (மாவட்ட நீர்படிப்பகுதி) விஸ்வநாதன், வேளாண்மை பொறியியல்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணைஇயக்குனர் ராமச்சந்திரன் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் திட்ட விளக்க உரையாற்றினார்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்த திட்டத்தில் முதற்கட்டமாக ஒரு கிராமத்தில் தொடர்ச்சியாக நிலம் கொண்ட ஒரே பயிரினை சாகுபடி செய்யும் 20 சிறு மற்றும் குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட வேண்டும்.

2-ம் கட்டமாக வட்டார அளவில் ஒரே பயிர் வகைகளை சாகுபடி செய்யும், கிராமங்களிலோ அல்லது பக்கத்து கிராமங்களிலோ உள்ள 5 ஆர்வலர் குழுக்களை இணைத்து 100 பேர் கொண்ட ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவினை ஏற்படுத்திட வேண்டும். அடுத்த நிலையாக ஒவ்வொரு 10 உழவர் உற்பத்தி குழுக்களை ஒருங்கிணைத்து ஆயிரம் சிறு, குறு விவசாயிகளை கொண்ட ஒரு உழவர் உற்பத்தி நிறுவனத்தை ஏற்படுத்தி, உற்பத்தி நிறுவனர்களாக முன்னேற வாய்ப்பளிக்கப்படுகிறது.

அனைத்து உழவர் ஆர்வலர் குழுவும் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுவும், ஒவ்வொரு மாதமும் கூடி தங்கள் வயல்வெளி அனுபவங்களையும் புதிய தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து கொண்டு அடுத்து மேற்கொள்ள வேண்டிய கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நடப்பாண்டில் வேளாண்மை துறையின் மூலம் 22 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களும் தொடங்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கும் தொகுப்பு நிதியாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. இந்த நிதியை கொண்டு குழு உறுப்பினர்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான பண்ணை கருவிகளை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்படும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

அதைத்தொடர்ந்து பண்ணை எந்திர விற்பனையாளர்கள் சார்பில் அமைக்கப்பட்ட வேளாண் எந்திரங்களின் கண்காட்சியை கலெக்டர் சண்முகசுந்தரம் திறந்து வைத்து பார்வையிட்டார். முடிவில் அணைக்கட்டு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா நன்றி கூறினார்.

Next Story