புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், பச்சைக்கொடி ஏந்தி விவசாயிகள் பேரணி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு


புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில், பச்சைக்கொடி ஏந்தி விவசாயிகள் பேரணி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jan 2021 11:22 PM GMT (Updated: 21 Jan 2021 11:22 PM GMT)

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் பச்சைக்கொடி ஏந்தி விவசாயிகள் பேரணி நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவசாய அமைப்புகள், பல்வேறு கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சையில் பச்சைக்கொடி ஏந்தி பேரணி நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு சிலையில் இருந்து பேரணி புறப்பட்டது. பேரணிக்கு காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க தலைவர் தனபாலன், காவிரி உரிமை மீட்புக்குழு பொருளாளர் மணிமொழியன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பச்சைக்கொடி ஏந்தி....

பேரணி நாகை சாலை வழியாக சாந்தப்பிள்ளை கேட் வந்து ரெயிலடி, காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம், அண்ணாசிலை வழியாக பெரியகோவில் அருகே உள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையை அடைந்தது. இந்த பேரணி 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தது. இதில் விவசாயிகளும், பெண்களும் பச்சைக்கொடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

பேரணியில், விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பேரணி முடிவில் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பேரணியில் காவிரி உரிமை மீட்புக்குழுவை சேர்ந்த பாரதிசெல்வன், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, தமிழ்தேசிய பேரியக்க பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், தமிழக விவசாயிகள் சங்க டெல்டா ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசன், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story