மீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்


மீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மீனவர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2021 12:58 AM GMT (Updated: 23 Jan 2021 12:58 AM GMT)

மீன் பிடிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மீனவர்கள் வலியுறுத்தினார்கள்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. பின்னர் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த கூட்டம் நேற்று வழக்கம் போல், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது.

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை ஆரோக்கியபுரம் முதல் பெரியகாடு வரையும், 11.35 மணி முதல் 12.35 மணி வரை ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரை உள்ள பகுதிகளுக்கும் இரு கட்டமாக மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

கலெக்டர்

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பயிற்சிஉதவி கலெக்டர் ரி‌‌ஷாப், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாதன் பாண்டியன், கடல் அரிப்பு தடுப்பு கோட்ட நிர்வாக பொறியாளர் வசந்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூறியதாவது:-

நேரத்தை நீட்டிக்க வேண்டும்

கன்னியாகுமரி சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலுக்கு சென்ற 48 மணி நேரத்தில் கரைக்கு திரும்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடலில் 50 நாட்டிக்கல் தொலைவில் சென்று மீன் பிடித்தால் தான் மீன் கிடைக்கும்.

ஆனால் 48 மணி நேரத்தில் கரை திரும்ப வேண்டும் என்பதால் மீன் பிடிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மீன்பிடித்து கரைக்கு திரும்பும் மீனவர்களின் நேரத்தை 48 மணி நேரத்தில் இருந்து 96 மணி நேரமாக நீட்டிக்க வேண்டும்.

சாலை வசதி

சின்னமுட்டம் சாலை மிக குறுகலான சாலையாக உள்ளது. முன்பு சின்னமுட்டம் துறைமுகத்தில் செல்லும் மீனவர்கள் மட்டும் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள், வீடுகள் உள்ளது. இந்தச் சாலையை தற்போது ஏராளமானவர்கள் பயன்படுத்துவதால், கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே மீனவர்கள் நலன் கருதி கன்னியாகுமரியில் இருந்து சின்ன முட்டத்திற்கு கடற்கரை வழியாக புதிய சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் அங்கு புறவழிச்சாலை அமைத்து தரவேண்டும். புறவழிச்சாலை மற்றும் கடற்கரை சாலை அமைக்கும்போது பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது.

மாற்ற வேண்டும்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யும் அறையின் முன் பகுதியில் பொதுமக்கள் அமர்வதற்கு வசதியாக இருக்கை வசதி செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் தற்போது மின்சாரம் தடை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே மின்சார தடை செய்யும் நேரத்தை காலை 9 மணிக்கு மாற்ற வேண்டும்.

மீனவர்களுக்கு வானிலை எச்சரிக்கை கொடுத்தால் நாங்கள் உடனடியாக கரை திரும்பி விடுவோம். சொத்தவிளை கடற்கரை சாலை கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சங்குத்துறை கடற்கரை சாலையும் பாதிக்கப்பட்டு வருகிறது. அதை தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்குத்துறை கடற்கரைக்கு தற்போது தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள இருக்கைகள் பழுதாகி காணப்படுகிறது. காட்சி கோபுரமும் மோசமான நிலையில் உள்ளது. இவற்றை சீரமைக்க வேண்டும்.

பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல் அரிப்பு தடுப்பு சுவரை நீட்டிப்பு செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் மீனவ நலவாரியம் மூலம் 65 வயதான மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பிற நலவாரியத்தில் ஓய்வூதியம் வழங்குவதுபோல் ரூ.1000-ம் ஆக வழங்க வேண்டும். கடலோர கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகள் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கூறினார்கள்.

நடவடிக்கை

அதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஏற்கனவே பொதுமக்கள் அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பிரேத பரிசோதனை செய்யும் பகுதியிலும் இருக்கை வசதிகள் செய்துதரப்படும். மின்வாரிய தலைமை அதிகாரிகளிடம் பேசி மின்தடை நேரம் மாற்றி அமைக்கப்படும். சின்ன முட்டத்திற்கு புதிதாக சாலைகள் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்.

சின்ன முட்டம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று திரும்பும் நேரத்தை நீட்டிக்க சொல்வது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சங்குத்துறை கடற்கரை சாலை சங்குதுறைபீச்சை மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

பள்ளம் துறையில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் நீட்டிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 120 மீட்டர் நீளத்திற்கு கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார்.

Next Story