பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சாலைமறியல் ;13 பேர் கைது


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ்  சாலைமறியல் ;13 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2021 3:47 PM GMT (Updated: 23 Jan 2021 3:47 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரசை சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்

புதுச்சேரி, 


பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று காலை அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமே‌‌ஷ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இரு சக்கர வாகனத்தை சாய்த்து போட்டு, அதன் அருகில் சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்து இரண்டிற்கும் மாலை அணிவித்து   மத்திய   அரசுக்கு எதிராக கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

13 பேர் கைது 

பின்னர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு திடீரென அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த ஒதியஞ்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரையும் பறிமுதல் செய்தனர்.இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story