ஸ்மார்ட் பெண் திட்டம் தொடக்கம்: விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம் - கலெக்டர் பேச்சு


ஸ்மார்ட் பெண் திட்டம் தொடக்கம்: விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம் - கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 23 Jan 2021 4:40 PM GMT (Updated: 23 Jan 2021 4:40 PM GMT)

விடாமுயற்சி, தைரியம் இருந்தால் பெண் குழந்தைகள் சாதிக்கலாம் என்று ஸ்மார்ட் பெண் திட்ட தொடக்க விழாவில் கலெக்டர் பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில், தேசிய பெண் குழந்தைகள் தினவிழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி ஸ்மார்ட் பெண் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பெண் குழந்தைகள் தினம் குறைந்து வரும் பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆண்டின் நோக்கமாகும். நீலகிரி மாவட்டத்தில் பாலின விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் அனைத்து தாய்மார்களும் முழுமையாக கண்காணிக்க படுவார்கள்.

கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறியும் மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தொடங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் பெண் என்ற திட்டத்துக்காக 12 வயது முதல் 18 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம். பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு என்று தனித்திறமைகள் உள்ளன. படிப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும், விடாமுயற்சி மற்றும் தைரியம் இருந்தால் வாழ்க்கையில் சாதித்து வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது. முன்னதாக தோடர் இன மக்கள் மற்றும் கோத்தர் இன மக்களின் பாரம்பரிய நடனத்தை மாணவிகள் அரங்கேற்றினர். விழாவில் ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பிரபு, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story