பெங்களூருவில், ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல்
பெங்களூருவில் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு கே.ஆர்.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 19 வயது இளம்பெண் வசிக்கிறார். இவர், கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அந்த மாணவிக்கும், கே.ஆர்.புரம் அருகே தேவசந்திராவை சேர்ந்த பூஷன் யாதவ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நண்பர்களாக பழகினார்கள். பின்னர் மாணவியின் வீட்டுக்கு பூஷன் சென்றிருந்தார். அதன்பிறகு, சில நாட்கள் கழித்து மாணவியை தொடர்பு கொண்டு பேசிய அவர், ‘‘உன்னுடைய ஆபாசம் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. அதனை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும்’’ என்று கூறி மிரட்டியுள்ளார்.
மேலும் பணம் கொடுக்கவில்லை எனில், நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மாணவியை பூஷன் மிரட்டி வந்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவி தனது மாமா வீட்டில் இருந்து அடிக்கடி பணம், நகைகளை எடுத்து கொடுத்து வந்துள்ளார். ஒட்டு மொத்தமாக மாணவியிடம் இருந்து 218 கிராம் தங்க நகைகள், ரூ.75 ஆயிரத்தை பூஷன் மிரட்டி வாங்கி இருந்தார். அதன்பிறகு, மாணவியுடன் பேசுவதையும், பழகுவதையும் பூஷன் நிறுத்தி விட்டார்.
இதற்கிடையில், பூஷனின் நண்பர் எனக்கூறி மாணவியிடம் விவேக் ரெட்டி என்பவர் பேசியுள்ளார். பின்னர் சில நாட்கள் கழித்து மாணவியின் ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க பணம் கொடுக்கும்படியும் கேட்டு விவேக் ரெட்டி மிரட்டி உள்ளார். அதுபோல, பூஷனும் மாணவியை தொடர்பு கொண்டு பேசி மீண்டும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனம் உடைந்த மாணவி நடந்த சம்பவங்கள் குறித்து பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து, கே.ஆர்.புரம் போலீஸ் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில், தேவசந்திராவை சேர்ந்த பூஷன் யாதவ்(வயது21), விவகே் ரெட்டி(21) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகி விட்ட 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story