வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்


வாக்காளர் தினத்தையொட்டி சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்
x
தினத்தந்தி 24 Jan 2021 5:16 AM GMT (Updated: 24 Jan 2021 5:16 AM GMT)

வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி கலெக்டர் அரவிந்த் சைக்கிள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நாகர்கோவில்,

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு தினத்தையொட்டி நாகர்கோவிலில் நேற்று சைக்கிள் பேரணி நடந்தது. பேரணிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியதோடு பேரணியையும் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியானது டதி பள்ளி சந்திப்பு, கோர்ட்டு ரோடு வழியாக வேப்பமூடு பூங்கா முன் வந்து முடிவடைந்தது.

இந்த பேரணியில் கலெக்டர் அரவிந்தும் பங்கேற்று சைக்கிள் ஓட்டிச் சென்றார். டி-சர்ட் அணிந்து கொண்டு பேரணியில் முதல் ஆளாக அவர் சென்றார்.

பதாகைகள்

அவருடன் வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆ‌ஷா அஜித், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல், தேர்தல் தனி தாசில்தார் சேகர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் சைக்கிள் ஓட்டினர்.

பேரணியாக சென்றவர்கள் தங்களது சைக்கிளின் முன் “வாக்களிப்பது உரிமை, வாக்களிப்பது கடமை, ஒற்றை விரல் நீல மையால் உரிமையை மீட்போம்” என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்த பதாகைகளை வைத்திருந்தனர்.

Next Story