திருப்பூரில் ஏலச்சீட்டுக்கட்டி பணம் இழந்தவர்கள் கோர்ட்டு முன்பு திரண்டதால் பரபரப்பு


திருப்பூரில் ஏலச்சீட்டுக்கட்டி பணம் இழந்தவர்கள் கோர்ட்டு முன்பு திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 6:06 AM GMT (Updated: 24 Jan 2021 6:06 AM GMT)

திருப்பூர் வளையங்காடு பகுதியை சேர்ந்த முனியாண்டி என்பவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பணம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஏலச்சீட்டு முதிர்வு தொகையை கொடுக்காமல் முனியாண்டி தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் முனியாண்டி திவால் ஆனதாக திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து ஆட்சேபனை தெரிவிக்க, பணம் செலுத்தியவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. 80-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று கோர்ட்டு வளாகத்துக்கு வந்தனர். ஆனால் மார்ச் மாதம் 25-ந்தேதி வாய்தா போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே 2 முறை வாய்தா போடப்பட்டு தற்போதும் வாய்தா போடப்பட்டுள்ளதால் கோர்ட்டு நுழைவு வாசல் முன்பு திரண்டு தரையில் அமர முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதுகுறித்து திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) பேச வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story