கோபி பவளமலை முத்துக்குமார சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா; கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது


கோபி பவளமலை முத்துக்குமார சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா; கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 24 Jan 2021 10:33 PM GMT (Updated: 24 Jan 2021 10:33 PM GMT)

கோபி பவளமலை முத்துக்குமார சாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

கடத்தூர்
கோபி பவளமலை முத்துக்குமார சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
நாளை கொடியேற்றம்
கோபி அருகே பவளமலை முத்துக்குமார சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தைப்பூச தேர்த்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 10 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் சேவல் கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.  மாலை 5 மணி அளவில் யானை வாகனத்தில் சாமி கிரி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், மாலை 6 மணி அளவில் யாகசாலை பூஜையும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை முத்துக்குமார சாமிக்கு அபிஷேகமும், அதைதொடர்ந்து யாகசாலை பூஜைகளும் நடத்தப்படுகிறது.. மாலை 6 மணி அளவில் ஆட்டுக்கிடாய் வாகனத்தில் சாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேரோட்டம்
28-ந் தேதி காலை 7 மணி அளவில் பால்குடம் எடுத்து பெண்கள் வரும் நிகழ்ச்சியும், பகல் 11 மணி அளவில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் அன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்கிறார்கள். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 29-ந் தேதி ஆறுமுக பெருமானுக்கு சிகப்பு சாற்றுதல் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து சண்முகர் அர்ச்சனையும், பின்னர் வெள்ளாளபாளையத்துக்கு சாமி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

Next Story