உத்தமபாளையம் அருகே ஜல்லிக்கட்டு: முரட்டு காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்


திமிலை பிடித்து காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்.
x
திமிலை பிடித்து காளையுடன் மல்லுக்கட்டிய வீரர்.
தினத்தந்தி 25 Jan 2021 5:15 AM GMT (Updated: 25 Jan 2021 5:15 AM GMT)

உத்தமபாளையம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் முரட்டு காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். இதில் 47 பேர் காயம் அடைந்தனர்.

ஜல்லிக்கட்டு
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில் ஏழைகாத்த அம்மன்-வல்லடிகாரர் சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. 

முன்னதாக வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி தகுதியானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, வருவாய் அலுவலர் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தனர். கால்நடை டாக்டர்களின் பரிசோதனைக்கு பிறகு தேர்வு செய்யப்பட்ட காளைகள் ஒன்றின் பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.

முதலில் ஏழைகாத்த அம்மன் கோவில் காளை வாடி வாசலில் அவிழ்த்து விடப்பட்டது. இதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை.

570 காளைகள் பங்கேற்பு
மதுரை, திண்டுக்கல். ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 570 காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றன.

இதேபோல் பதிவு செய்த வீரர்கள் 340 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்துக்கு 75 வீரர்கள் மட்டும் களம் இறக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் துள்ளிக்குதித்த காளைகளை பிடிக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். வாடிவாசல் முன்பு சீருடை அணிந்த மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு காளைகளை அடக்கினர். சில காளைகள், வீரர்களை தூக்கி வீசி பந்தாடின.

47 பேர் காயம்
திமிறிக்கொண்டு துள்ளி குதித்து வந்த காளைகளை மடக்கி பிடித்த வீரர்களுக்கும், பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிகாசுகள், சில்வர் அண்டா, குக்கர், சேர், வாஷிங் மெஷின், ரொக்க பணம் உள்ளிட்ட ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் என மொத்தம் 47 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். படுகாயமடைந்த 5 பேரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிணற்றுக்குள் விழுந்த காளை
திருச்சியில் இருந்து கொண்டுவரப்பட்ட காளை ஒன்று, ஜல்லிக்கட்டு மைதானத்தில் இருந்து வெளியே ஓடி வந்தது. அப்போது அருகே உள்ள கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயத்தோடு காளையை மீட்டனர்.

தேனி அல்லிநகரத்தை சேர்ந்த 2 திருநங்கைகள் 2 காளைகளை கொண்டு வந்தனர். அவர்கள் காளைகளை வீரர்களால் பிடிக்க முடியாததால், உரிமையாளர்களான திருநங்கைகளுக்கு தலா ரூ.1,000 மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஆ.ர்.டி.ஓ நிறைமதி, தாசில்தார் உதயராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story