ஐகோர்ட்டில் குடியரசு தின விழா வேட்டி-சட்டையில் தலைமை நீதிபதி, நீதிபதிகள்


ஐகோர்ட்டில் குடியரசு தின விழா வேட்டி-சட்டையில் தலைமை நீதிபதி, நீதிபதிகள்
x
தினத்தந்தி 27 Jan 2021 2:59 AM GMT (Updated: 27 Jan 2021 2:59 AM GMT)

ஐகோர்ட்டில் குடியரசு தின விழா வேட்டி-சட்டையில் தலைமை நீதிபதி, நீதிபதிகள் வரலாற்றில் முதன் முறையாக பாரம்பரிய உடையில் பங்கேற்பு.

சென்னை,

நாட்டின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தேசிய கொடியை நேற்று ஏற்றினார். இந்த நிகழ்ச்சில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலாளர் சண்முகம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று நீதிபதிகள் அனைவரும் ‘கோட்-சூட்' அணிந்து தான் கலந்து கொள்வார்கள். ஆனால், இம்முறை, விரும்பியவர்கள் பாரம்பரிய ஆடை அணிந்து வரலாம் என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார். மேலும், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி வேட்டியும், ஜிப்பாவும் அணிந்து வந்து தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், டி.எஸ்.சிவஞானம், எம்.துரைசாமி, டி.ராஜா, வி.கண்ணதாசன், எம்.கோவிந்தராஜ், ஆர்.சுரேஷ்குமார், எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.ஜெயச்சந்திரன், ஜி.கே.இளந்திரையன் உள்பட பல நீதிபதிகள் வேட்டி அணிந்து விழாவில் கலந்து கொண்டனர். ஐகோர்ட்டு வரலாற்றிலேயே, குடியரசு தினத்தன்று தலைமை நீதிபதியும், பிற நீதிபதிகளும் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் வந்தது இதுவே முதல் முறை ஆகும்.

Next Story