ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து சென்டிரலில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வேயை தனியார்மயமாக்குவதை கண்டித்து சென்டிரலில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2021 3:04 AM GMT (Updated: 2 Feb 2021 3:04 AM GMT)

இந்திய ரெயில்வேயை தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து தெற்கு ரெயிவே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை, 

இந்திய ரெயில்வேயை தனியார்மயம் ஆக்குவதை கண்டித்து தெற்கு ரெயிவே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியனின் தலைவர் சி.ஏ.ராஜாஸ்ரீதர் தலைமை தாங்கினார். சென்னை கோட்ட செயலாளர் பால்மேக்ஸ்வெல் ஜான்சன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ராஜாஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரெயில்வே துறை, ரெயில் பணிமனைகள், ரெயில்வே தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளிடவைகளை தனியார்மயம் என்ற பேரில் பெரும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் என அனைவரும் பெரிதும் அவதிக்கு உள்ளாவார்கள். எனவே தனியார்மயம் ஆக்குவதை உடனடியாக கைவிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பூர் லோகோ பணிமனை அலுவலகம் எதிரிலும், பெரம்பூர் கேரேஜ் அலுவலகம் எதிரிலும் எஸ்.ஆர்.ஈ.எஸ். ெரயில்வே தொழிற்சங்கம் சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் சூரிய பிரகாசம், பணிமனை கோட்ட தலைவர் கருணாகரன் உள்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story