மாட்டுக்காரன்புதூர் அருகே மண் சரிந்து வாலிபர் பலி; சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அக்காள் புகார்
மாட்டுக்காரன்புதூர் அருகே மண் சரிந்து விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக வாலிபரின் அக்காள் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
மண் சரிந்தது
சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பண்ணப்பட்டி காங்ேகயனூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 25), தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகன் (24) என்பவரும், மாட்டுக்காரன்புதூர் அருகே உள்ள தனக்கொடி என்பவரின் விவசாய நிலத்தில் டிராக்டரில் மண் அள்ளினர்.
அப்போது பள்ளத்தில் நின்று கொண்டிருந்த சதீஷ்குமார் மீது மண் சரிந்து விழுந்து அமுக்கியது. இதில் மூச்சு திணறி படுகாயம் அடைந்த சதீஷ்குமார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
போலீசில் புகார்
இதனிடையே சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசில் சதீஷ்குமாரின் அக்காள் சரண்யா புகார் தெரிவித்துள்ளார். அதில் தனது தம்பி சாவில் சந்தேகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.
அதன்பேரில் வாலிபர் சதீஷ்குமாரின் மர்ம சாவு குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story