தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண்


தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 4 Feb 2021 4:55 AM GMT (Updated: 4 Feb 2021 4:55 AM GMT)

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

மதுராந்தகம், 

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள மேல்மணம்பேடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 45). பூந்தமல்லி மேற்கு ஒன்றிய தி.மு.க. துணைச்செயலாளராக இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கருணாகரன் வெள்ளவேடு அருகே தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக டீக்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கோர்ட்டில் சரண்

இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுராந்தகம் குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நீதிபதி திருமால் முன்னிலையில் 5 பேர் சரண் அடைந்தனர். அவர்கள் வெள்ளவேடு பகுதியை சேர்ந்த விஷ்வா, அஸ்வின்குமார், தமிழ்ச்செல்வன், சரவணன், இளமுருகன் என்பது தெரியவந்தது.

அவர்களை வருகிற 8-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story