கிணற்றில் வடமாநில வாலிபர் பிணம்; கொலையா போலீசார் விசாரணை
இருக்கூர் அருகே கிணற்றில் வடமாநில வாலிபர் பிணம் மிதந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்,
ஒடிசா மாநிலம் மயிர்பாஞ்ச் மாவட்டம் தாரம்புரா பகுதியை சேர்ந்தவர் புந்துமரண்டி (வயது 25). இவர் இருக்கூர் அருகே உள்ள சேலூர்செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு அட்டை தயாரிக்கும் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த 6-ந் தேதி புந்துமரண்டி காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்த உடன் வேலை பார்த்தவர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால் புந்துமரண்டியை கண்டுபிடித்து தருமாறு பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து புந்துமரண்டியை தேடி வந்தனர். இந்தநிலையில் சேளூர் செல்லப்பம்பாளையம் செல்லும் வழியில் உள்ள மணிகண்டன் என்பவரது விவசாய கிணற்றில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். போலீசார் விசாரனையில் கிணற்றில் இறந்து கிடந்தவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புந்துமரண்டி என்பது தெரியவந்தது.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வடமாநில வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story