ஆண்டிப்பட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


ஆண்டிப்பட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 10 Feb 2021 4:05 PM GMT (Updated: 10 Feb 2021 4:05 PM GMT)

ஆண்டிப்பட்டியில் ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.

ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோட்டார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பணன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கங்கையம்மாள் (வயது 27). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கங்கையம்மாளுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கருப்பணன் வீட்டிற்கு 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. 
இதையடுத்து கங்கையம்மாளை ஏற்றிக்கொண்டு அந்த ஆம்புலன்ஸ் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோக்கி சென்றது. ஆண்டிப்பட்டி அருகே வந்தபோது கங்கையம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானது. இதனால் ஆம்புலன்சில் வந்த நர்சு மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வாகனத்தை வழியிலேயே நிறுத்திவிட்டு கங்கையம்மாளுக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதைத்தொடர்ந்து தாயுக்கும், சேயுக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தாயையும், குழந்தையையும் பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் நலமாக உள்ளனர் என்று தெரிவித்தனர். 

Next Story