தமிழக நெடுஞ்சாலைகளை விபத்து இல்லாத சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழக நெடுஞ்சாலைகளை விபத்து இல்லாத சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் - தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Feb 2021 4:04 AM GMT (Updated: 11 Feb 2021 4:04 AM GMT)

தமிழக நெடுஞ்சாலைகளை விபத்து இல்லாத சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த நாட்களில் இரு கோர விபத்துகள் நிகழ்ந்து 9 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. 

இந்த விபத்துகளுக்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என நன்றாகத் தெரியும் நிலையில், தவறுகளை திருத்திக்கொள்ள மக்கள் முன்வராவிடில் மோசமான விளைவுகளை ஏற்படக்கூடும். 

பெரும்பான்மையான சாலைவிபத்துகள் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை தான் நிகழ்கின்றன. இந்த நேரத்தில் பொதுப்போக்குவரத்து தவிர பிற போக்குவரத்தை தடை செய்வதன் மூலம் பெரும்பான்மையான சாலை விபத்துகளை தடுக்க முடியும். விபத்துப் பகுதிகளில் உள்ள குறைகளைச் சீரமைத்து, அதில் சாலை விபத்துகள் நடக்காமல் தடுக்கவேண்டும். இதை காவல்துறை உடனடியாக செய்ய வேண்டும்.

நிதானமான வேகத்தில் பயணம், அதிகாலை நேரத்தில் பயணம் செய்யாமை, சாலைகளில் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்வதன் மூலம் தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story