தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் செடி-கொடிகள் எரிந்து நாசம்


தாளவாடி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ; பல ஏக்கரில் செடி-கொடிகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 13 Feb 2021 10:13 PM GMT (Updated: 13 Feb 2021 10:13 PM GMT)

தாளவாடி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.

தாளவாடி
தாளவாடி அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பல ஏக்கர் பரப்பளவிலான செடி-கொடிகள் எரிந்து நாசம் ஆனது.
வனப்பகுதி
தென்னிந்தியாவில் மிக செழிப்புடன் காணப்படுவது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். இது ஒரு லட்சத்து 4 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இங்கு தாளவாடி, ஜீர்கள்ளி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், பவானிசாகர், சத்தியமங்கலம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி         என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.யானை, சிறுத்தை, புலி, மான், காட்டெருமை, குரங்கு ஆகிய வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இயற்கை எழில்கொஞ்சும் இந்த புலிகள் காப்பக பகுதிகள் தற்போது கடும் வறட்சியில் உள்ளது. வனப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகள் காய்ந்து காணப்படுகிறது இதனால் வனவிலங்குகள் போதிய அளவு உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
காட்டுத்தீ
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் காட்டுத்தீ பற்ற தொடங்கி உள்ளது. ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட எத்திக்கட்டை வனப்பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற சிலர் ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் வனப்பகுதியில் நடந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காற்று வீசியதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். இந்த காட்டுத்தீயால் பல ஏக்கர் பரப்பளவிலான மரம், செடி, கொடிகள் எரிந்து நாசம் ஆனது.

Next Story