திருவொற்றியூரில் பல் டாக்டர் வீட்டில் கொள்ளை: வாடகைக்கு குடியிருந்த புரோகிதர் உள்பட 5 பேர் கைது


திருவொற்றியூரில் பல் டாக்டர் வீட்டில் கொள்ளை: வாடகைக்கு குடியிருந்த புரோகிதர் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 Feb 2021 6:19 AM GMT (Updated: 14 Feb 2021 6:19 AM GMT)

திருவொற்றியூரில் பல் டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் அவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த புரோகிதர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

திருவொற்றியூர் விம்கோ நகர் ஸ்ரீரங்கம் அவென்யூ 2-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (வயது 39). பல் டாக்டரான இவர், தண்டையார்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.

இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் புரோகிதர் சூரியநாராயணன் (28), தனது தாய் விஜயலட்சுமி(57), பெரியம்மா சுசிலா(61) ஆகியோருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று டாக்டர் ஜெயபிரகாஷ், தனது மனைவி மஞ்சுளா மற்றும் புரோகிதர் சூரியநாராயணன், பெரியம்மா ஆகியோருடன் காரில் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது மர்மநபர்கள் டாக்டர் வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே புகுந்து 40 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. மேலும் வீட்டில் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின்பேரில் டாக்டர் வீட்டில் குடியிருந்த புரோகிதர் சூரியநாராயணனை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், பல் டாக்டர் வீட்டில் நிறைய பணம், நகைகள் இருப்பதை தெரிந்து கொண்டு தனது தாய், பெரியம்மா மற்றும் நண்பரான ஆவடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (28), அவருடைய தாய் பத்மாவதி(50), மனைவி பிரேமா(26) , மாமா ஜெயக்குமார் ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டார்..

அதன்படி பல் டாக்டருடன் சூரியநாராயணன், அவரது பெரியம்மா ஆகியோர் கொட்டிவாக்கம் சென்று விட, அந்த நேரத்தில் சூரியநாராயணனின் தாய், ராதாகிருஷ்ணன், பத்மாவதி, பிரேமா, ஜெயக்குமார் ஆகியோர் டாக்டர் வீட்டின் ஜன்னலை உடைத்து கொள்ளையடித்தது தெரிந்தது.

இதையடுத்து புரோகிதர் சூரியநாராயணன், அவரது தாய் விஜயலட்சுமி, பெரியம்மா சுசிலா, நண்பர் ராதாகிருஷ்ணனின் தாய் பத்மாவதி, மனைவி பிரேமா என 4 பெண்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள ராதாகிருஷ்ணன், அவரது மாமா ஜெயக்குமார் இருவரையும் தேடி வருகிறார்கள்.

இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட சூரியநாராயணன், எம்.பி.ஏ. பட்டதாரி ஆவார். அதே பகுதியில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் குருக்களாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story