எடியூரப்பாவின் புகைப்படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்: மந்திரி ஆனந்த்சிங்
விஜயநகரை புதிய மாவட்டமாக உருவாக்கி உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் புகைப்படம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் என்று மந்திரி ஆனந்த் சிங் தெரிவித்துள்ளார்.
விஜயநகர் மாவட்டம்
பல்லாரி மாவட்டத்தை 2 ஆக பிரித்து புதிதாக விஜயநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. விஜயநகர் புதிய மாவட்டமாக மாற்றி இருப்பதற்கான அரசாணையும் வெளியாகி உள்ளது. விஜயநகர் புதிய மாவட்டமாக உருவாகி உள்ளதால், இதனை மந்திரி ஆனந்த்சிங் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.
இதுதொடர்பாக ஒசக்கோட்டை தாலுகாவில் நடந்த நிகழ்ச்சியில் மந்திரி ஆனந்த்சிங் கலந்து கொண்டு பேசியதாவது:-
எடியூரப்பாவின் புகைப்படத்தை...
காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் விஜயநகரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்க கூட்டணி ஆட்சியில் இருந்த தலைவர்கள் ஏற்கவில்லை. இதனால் எம்.எல்.ஏ. பதவியை முதன் முதலில் ராஜினாமா செய்தேன். கூட்டணி ஆட்சிக்கு எதிராக இருந்த மற்ற 16 எம்.எல்.ஏ.க்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். நான் பா.ஜனதாவில் சேர்ந்த போதும், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போதும், விஜயநகரை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று எடியூரப்பாவிடம் கோரிக்கை
விடுத்தேன். எனது கோரிக்கையை அவர் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மந்திரி பதவியை எதிா்பார்த்த போது, நான் மட்டும் விஜயநகரை புதிய மாவட்டமாக மாற்ற போராடினேன். அதன்படி, விஜயநகர் புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முதல்-மந்திரி எடியூரப்பாவே காரணம். இதனால் விஜயநகர் மாவட்டத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் முதல்-மந்திரி எடியூரப்பாவின் புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும். விஜயநகர் புதிய மாவட்டமாக மாறியுள்ளதால், இந்த மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story