மாநில அந்தஸ்து விவகாரத்தில் அடிப்படை தெரியாமல் பேசக்கூடாது: புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம்


புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம்
x
புதுச்சேரி பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம்
தினத்தந்தி 14 Feb 2021 3:15 PM GMT (Updated: 14 Feb 2021 3:15 PM GMT)

மாநில அந்தஸ்து விவகாரத்தில் அடிப்படை தெரியாமல் பேசக்கூடாது என்று அரசு கொறடா அனந்தராமனுக்கு ஏம்பலம் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ஏம்பலம் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அடிப்படை தெரியாமல்...
காங்கிரஸ் கட்சியின் உண்மை சொரூபத்தையும் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் அரசியலைப் பற்றியும் உண்மையை சொன்னால் அரசு கொறடா அனந்தராமனுக்கு தேவையற்ற ஆவேசம் வருகிறது.

2007-ம் ஆண்டு நாராயணசாமி மத்திய மந்திரியாக இருந்தபோதுதான் புதுவைக்கு தனிக்கணக்கு தொடங்க வைத்து மாநிலத்தை நிதி நெருக்கடியில் தள்ளினார். அப்போதே மாநிலத்தின் கடன் தொகையை தள்ளுபடி செய்து இருக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்-அமைச்சர்களான பரூக் மரைக்காயர், வைத்திலிங்கம், சண்முகம், ரங்கசாமி உள்ளிட்ட பல முதல்-அமைச்சர்கள் மாநில அந்தஸ்து வேண்டி தீர்மானம் நிறைவேற்றியும் அப்போதைய காங்கிரஸ் அரசு செவிசாய்க்காமல் இருந்தது. ஒரு மாநில முதல்-அமைச்சர் மாநில அந்தஸ்து கேட்கத்தான் முடியுமே தவிர அதை கொடுக்க வேண்டிய கடமை மத்திய அரசிடம்தான் உள்ளது. இந்த அடிப்படைகூட தெரியாமல் அனந்தராமன் பேசக்கூடாது.

மோசடிக்கு துணை
சின்னஞ்சிறிய அழகிய புதுச்சேரி மாநிலத்தை அழித்த பெருமை காங்கிரஸ் கட்சியையே சாரும். முதல்-அமைச்சர் காங்கிரஸ் கட்சியை தவறாக வழிநடத்துவதை கண்டு வெகுண்டெழுந்துதான் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் போர்க்கொடி தூக்கி வெளியேறினார்.

தானோ தனது குடும்பமோ தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்று சொல்லி ஓட்டுகேட்ட நாராயணசாமி கட்சி வெற்றிபெற்ற பின் அரசியல் மோசடி நாடகத்தை நடத்தி குறுக்கு வழியில் முதல்-அமைச்சராகும் மோசடிக்கு உறுதுணையாக இருந்தவர்தான் அனந்தராமன்.அரசு கொறடா அனந்தராமன் தைலாபுரம் தோட்டத்தை ஏமாற்றியதுபோல் புதுவை மக்களை ஏமாற்ற முடியாது. 2016 வரை அவர் எங்கிருந்தார் என்பது மக்களுக்கு தெரியும்.

மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் கடைசி அத்தியாயத்தை நாராயணசாமி எழுதிக்கொண்டிருக்கிறார். வருங்காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிச்சுவடிகூட இல்லாமல் பிரதமர் மோடியின் கனவை புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சி நிறைவேற்றும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story