காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம்


மளுக்கப்பாறை பஜார் பகுதியில் ஒற்றை காட்டு யானை நடந்து செல்வதை படத்தில் காணலாம்
x
மளுக்கப்பாறை பஜார் பகுதியில் ஒற்றை காட்டு யானை நடந்து செல்வதை படத்தில் காணலாம்
தினத்தந்தி 14 Feb 2021 9:43 PM GMT (Updated: 14 Feb 2021 9:45 PM GMT)

மளுக்கப்பாறை எஸ்டேட்டில் காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

வால்பாறை,

மளுக்கப்பாறை எஸ்டேட்டில் காட்டு யானை டீக்கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து சுற்றித்திரிந்து வந்த காட்டு யானைகள் கூட்டம் தற்போது வால்பாறை பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாகவும்  கோடைக் காலம் தொடங்கவுள்ளதாலும் அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட கேரள வனப்பகுதிகளுக்கு திரும்ப தொடங்கி விட்டது.

இந்த நிலையில் வால்பாறை வனப்பகுதிக்குள் இருந்து கேரள வனப்பகுதிக்குள் செல்லத் தொடங்கிய காட்டு யானைகள் கூட்டத்தை சேர்ந்த ஒற்றை யானை சோலையார் அணைக்கு அருகில் உள்ள கேரள மாநிலம் மளுக்கப்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. 

நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மளுக்கப்பாறை பஜார் பகுதிக்குள் நுழைந்து பாவா என்பவரின் டீக்கடையை உடைத்து சேதப்படுத்தியது.

இதனை தொடர்ந்து மளுக்கப்பாறை வனத்துறையினர் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டு விடிய, விடிய எஸ்டேட் பகுதி மக்களுடன் சேர்ந்து ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனாலும் இந்த ஒற்றை யானை குடியிருப்புக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் பதுங்கியிருப்பதால் நள்ளிரவில் அல்லது அதிகாலை நேரத்தில் மீண்டும் குடியிருப்புக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

Next Story