காதல் ஜோடிகளால் களைகட்டிய மாமல்லபுரம்


காதல் ஜோடிகளால் களைகட்டிய மாமல்லபுரம்
x
தினத்தந்தி 15 Feb 2021 6:01 AM GMT (Updated: 15 Feb 2021 6:01 AM GMT)

காதல் ஜோடிகளால் மாமல்லபுரம் நகரம் களை கட்டியது.

மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் ஏராளமான காதல் ஜோடிகள் வருகை தந்து காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். நேற்று காலை 6 மணி முதல் சாரை சாரையாக காதல் ஜோடிகள் மோட்டார் சைக்கிளிலும், பஸ்சிலும் வரத்தொடங்கினார்கள். சென்னை, தாம்பரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் பல இடங்களில் இருந்து ஏராளமான காதல் ஜோடிகள் வந்தனர்.

அவர்கள் முக்கிய புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

தங்கள் மனம் கவர்ந்த பரிசு பொருட்களை காதலிக்கு வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர். சில பெண்கள் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாத வகையில் சுடிதார் துப்பட்டாவல் முகத்தை மூடி கொண்டு காதலனுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்தனர்.

ஜோசியம் பார்த்தனர்

காதல் ஜோடிகள் சிலர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். கடற்கரையில் மணலில் அமர்ந்து பொழுதை கழித்த காதலர்கள் பலர் அங்கு ஜோசியம் பார்த்த பெண்களிடம் தங்கள் காதல் கை கூடுமா என்று கைரேகை ஜோசியம் பார்த்ததை காண முடிந்தது. சில காதல் ஜோடிகள் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததை கூட பொருட்படுத்தாமல் அலட்சியமாக கடலின் ஆழமான பகுதியில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

அவர்களை போலீசார் கரைக்கு திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர். குறிப்பாக அதிகாலை நேரத்திலும் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்க்கவும் ஏராளமான காதல் ஜோடிகள் வந்திருந்ததை காண முடிந்தது. மொத்தத்தில் நேற்று காதலர் தினத்தால் மாமல்லபுரம் நகரம் களைகட்டியது. 

Next Story