புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு?


புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு?
x
தினத்தந்தி 16 Feb 2021 6:39 AM GMT (Updated: 16 Feb 2021 6:39 AM GMT)

காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுச்சேரி,

புதுவை சட்டமன்றத்தை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 33 பேர் இருப்பார்கள். கட்சி தாவல் நடவடிக்கை காரணமாக பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் பதவி பறிக்கப்பட்டது. 

சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவும் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவது புதுவை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதலமைச்சர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதற்கிடையே,  புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Next Story