தலை துண்டித்து பிரபல ரவுடி கொலை


தலை துண்டித்து பிரபல ரவுடி கொலை
x
தினத்தந்தி 16 Feb 2021 9:12 PM GMT (Updated: 16 Feb 2021 9:12 PM GMT)

கடலூரில் 10 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் வெட்டி பிரபல ரவுடியின் தலையை துண்டித்து கொலை செய்தது.

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் வீரா என்கிற வீரங்கையன் (வயது 30). பிரபல ரவுடியான இவருக்கு சமீபத்தில்தான் திருமணமானது. கடலூர் உழவர் சந்தை அருகில் வீரா, பழக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு வீரா வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்தது. இதை எதிர்பாராத வீரா, வீடு இருந்த தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

தலை துண்டித்து கொலை 

அந்த சமயத்தில் அந்த தெருவில் ஆட்கள் நடமாட்டமில்லை. இதை கவனித்த அந்த கும்பல், தாங்கள் வைத்திருந்த அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வீராவை சரமாரியாக வெட்டியது. இதில் அவரது உடல் முழுவதும் வெட்டுக்காயங்கள் விழுந்தன. இதனால் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். 
இருப்பினும் ஆத்திரம் தீராததால் அந்த கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு, வீராவின் தலையை துண்டித்தது. பின்னர் அவரது உடலை அங்கேயே போட்டுவிட்டு, தலையுடன் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களில் ஏறி அங்கிருந்து மின்னல் வேகத்தில் அந்த கும்பல் தப்பி சென்றது. 

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை 

இதற்கிடையில் சத்தம் கேட்டு வீராவின் மனைவி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தனர். அங்கு வீரா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் வீராவின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. 
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீராவின் உடலை பார்வையிட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

காரணம் என்ன?

பின்னர், வீராவின் தலை அந்த பகுதியில் உள்ளதா? என்று தேடிப்பார்த்தனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தேடுதல் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் மட்டும் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
கொலையுண்ட வீராவின் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளன. எனவே முன்விரோதம் காரணமாக வீராவை யாரேனும் பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கோணத்திலும், அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

3 பேர் சிக்கினர் 

இதற்கிடையே குற்றவாளிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் பண்ருட்டி நோக்கி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு புதுப்பேட்டையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த கடலூர் குப்பங்குளத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story