கறவை மாடு கேட்டு முன்னாள் சாராய வியாபாரிகள் கோரிக்கை மனு


கறவை மாடு கேட்டு முன்னாள் சாராய வியாபாரிகள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 17 Feb 2021 5:50 PM GMT (Updated: 17 Feb 2021 5:50 PM GMT)

கறவை மாடு கேட்டு முன்னாள் சாராய வியாபாரிகள் கோரிக்கை மனு

வேலூர்

பேரணாம்பட்டு தாலுகாவை சேர்ந்த ஏரிகுத்தி, பங்களாமேடு, அம்பேத்கர் நகர், கள்ளிப்பேட்டை, கோட்டை காலனி, கொண்டமல்லி போன்ற கிராமங்களை சேர்ந்த பலர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சாராயம் வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் அந்தத் தொழிலை கைவிட்டு, தற்போது கூலி வேலை, பீடி சுற்றுதல் போன்ற சிறு வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் மறுவாழ்வுக்காக அரசு தரப்பில் கறவை மாடு வழங்கப்படுகிறது. அந்தக் கறவை மாடு பெற மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் 2018-ம் ஆண்டு விண்ணப்பித்தனர். ஆனால் அவர்களுக்கு கறவை மாடு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதுகுறித்து அவர்கள் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். எனினும், அதிகாரிகள் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் நேற்று 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து கறவை மாடு கேட்டு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், மறு வாழ்வுக்காக அரசு வழங்கும் கறவை மாடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளனர். மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், எனப் போலீசார் தெரிவித்தனர்.

Next Story