விவசாயிகளின் அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்


விவசாயிகளின் அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 19 Feb 2021 5:24 PM GMT (Updated: 19 Feb 2021 5:24 PM GMT)

விவசாயிகளின் அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

சிவகங்கை,

விவசாயிகளின் அனைத்து பயிர் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வேளாண்மை இணை இயக்குனர் வெங்கடேஸ்வரன், கூட்டுறவு இணை பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும், விவசாயிகள் சார்பில் சந்திரன், கன்னியப்பன், ஆப்ரஹாம், வக்கீல் ராஜா, ராஜேந்திரன், நடராஜன், ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-
தற்போது தமிழக அரசு சார்பில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12 ஆயிரத்து 110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டில் இருந்து விவசாயிகளின் பயிர்க்கடன் நிலுவையில் உள்ளது. அரசின் அறிவிப்பால் இந்த கடன்கள் தள்ளுபடியாகி விட்டதாக விவசாயிகள் நினைத்தனர். ஆனால் பயிர்க்கடனாக வாங்கியிருந்தாலும் குறுகிய காலக்கடன்கள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும். மத்திய கால கடன் என பெயர் மாற்றம் ஆகி விட்டால் அந்த கடன் தள்ளுபடி செய்யப்படமாட்டாது என கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அனைத்து பயிர் கடனையும்...

விவசாயிகள் பயிர்க்கடன் என்ற பெயரில் வாங்கியிருந்தால் அதை பயிர்க்கடனாக மட்டுமே கருத வேண்டும். பெயர் மாற்றம் செய்து குறிப்பிட்ட கடனை மட்டுமே தள்ளுபடி செய்வோம் எனக்கூறுவதால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே அனைத்து பயிர்க்கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
வைகை அணையில் இளையான்குடி பகுதி கண்மாய்களுக்கு நீர் திறக்க வேண்டும். கால்நடை துணை மருத்துவ நிலையங்களில் மருத்துவர் நியமனம் செய்ய வேண்டும் மேலும் கடந்த 2 ஆண்டுகளாக சக்தி கரும்பு ஆலைநிர்வாகம் விவசாயிகள் வாங்கிய கடனுக்குரிய பணத்தை பிடித்து கொண்டு கட்டாமல் வைத்துள்ளனர். இதில் தற்போது ஒரு ஆண்டுக்குரிய கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் பேசும் போது:-

அரசு விதிமுறைப்படி...

பயிர்க்கடன் தள்ளுபடியில் அரசாணைப்படி கூட்டுறவு சங்கங்கள் செயல்படும். அரசின் விதிமுறைகளின்படிதான் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
இதையடுத்து வேளாண் துறையில் அட்மா திட்டம் மூலம் மாத இதழை கலெக்டர் வெளியிட்டார். முன்னதாக, வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட வேளாண்மை குறித்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார்.

Next Story