பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி


பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி
x
தினத்தந்தி 19 Feb 2021 9:33 PM GMT (Updated: 19 Feb 2021 9:33 PM GMT)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக திருச்சியில் பல்வேறு விற்பனை நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி, 

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் வலுத்து வருகிறது. 

அதன்படி,திருச்சியில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் திருச்சியில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலைங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் ரங்கராஜன் தலைமை தாங்கினார்.

மோட்டார் சைக்கிளுக்கு அஞ்சலி

ஆட்டோ தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் பலர் பங்கேற்று பெட்ரோல், டீசல் விலையை ரத்து செய்ய வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் கியாஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியும் கண்டன கோஷமிட்டனர்.

இதேபோன்று திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, சி.ஐ.டி.யு. தொழிற் சங்கம் சார்பில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒப்பாரி வைத்து போராட்டம்

இதுபோல், சத்திரம் பஸ்நிலையம், ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், அரியமங்கலம், பொன்மலை, உறையூர், திருவெறும்பூர், காட்டூர், குழுமணி பகுதிகளில் நடந்த தர்ணா போராட்டத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை வைத்து மாலை அணிவித்து ஒப்பாரி வைத்தனர். 

மேலும் திருச்சி அரியமங்கலம் மற்றும் உறையூர் ஆகிய பகுதிகளில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியமங்கலம் பகுதியில் நடைபெற்ற கண்டனஆர்ப்பாட்டத்திற்கு திருவெறும்பூர் தொகுதி தலைவர் இஸ்மாயில் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் இமாம் ஹஸ்ஸான், தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் காஜா மற்றும் மகளிர் அமைப்பின் தலைவி முமினா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இதில் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story