அமைந்தகரையில் மனைவி, மகன் பிரிந்து சென்றதால் டெய்லர் தீக்குளித்து தற்கொலை


அமைந்தகரையில் மனைவி, மகன் பிரிந்து சென்றதால் டெய்லர் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Feb 2021 11:18 AM GMT (Updated: 21 Feb 2021 11:18 AM GMT)

அமைந்தகரையில் மனைவி, மகன் பிரிந்து சென்ற சோகத்தில் டெய்லர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பூந்தமல்லி, 

அமைந்தகரை எம்.எம்.காலனி பகுதியை சேர்ந்தவர் வீரராகவன் (வயது 47). இவர் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி திலகவதி (43). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய வீரராகவன், தினமும் குடித்து விட்டு தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த மனைவி மற்றும் மகன் ஆகிய இருவரும் நங்கநல்லூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டனர். வீரராகவன் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் தனியாக இருந்த போது, குடிபோதையில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடல் மீது ஊற்றி தீ வைத்து கொண்டார்.

தீயில் கருகி பலி

இதனால் உடல் முழுவதும் தீ பரவியதையடுத்து வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அடைக்கப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீரராகவன் தீயில் கருகி இறந்து போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீரராகவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story