குடித்துவிட்டு பாட்டியிடம் தகராறு செய்த தந்தையை திருத்த தீக்குளிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண் உடல் கருகி சாவு; பெருந்துறை அருகே பரிதாபம்


குடித்துவிட்டு பாட்டியிடம் தகராறு செய்த தந்தையை திருத்த தீக்குளிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண் உடல் கருகி சாவு; பெருந்துறை அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 21 Feb 2021 9:26 PM GMT (Updated: 21 Feb 2021 9:26 PM GMT)

பெருந்துறை அருகே குடித்துவிட்டு வந்து பாட்டியிடம் தகராறு செய்த தந்தையை திருத்த தீக்குளிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண் உடல் கருகி இறந்தார்.

பெருந்துறை
பெருந்துறை அருகே குடித்துவிட்டு வந்து பாட்டியிடம் தகராறு செய்த தந்தையை திருத்த தீக்குளிப்பதாக தற்கொலை மிரட்டல் விடுத்த இளம் பெண் உடல் கருகி இறந்தார். 
குடிப்பழக்கம்
பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள பெரிய வீரசங்கிலி காலனி பகுதியை சேர்ந்தவர் கைத்தான் (வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி இறந்துவிட்டார். கைத்தானுடன் தாய் லட்சுமி (70), மகள் நளினி (27) ஆகியோர் வசித்து வந்தார்கள்.
கைத்தானுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனது தாய் லட்சுமியிடம் வாய்த்தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் நளினி தனது தந்தையிடம், "ஏன் குடித்து விட்டு வந்து பாட்டியிடம் தேவையில்லாமல் தகராறு செய்கிறீர்கள்?", என கண்டிப்பாராம். 
மிரட்டல்
சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கைத்தான், வழக்கம்போல் லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதை கண்டதும் நளினி, ‘எதையாவது செய்து தனது தந்தையை திருத்த வேண்டும்,’ என முடிவெடுத்தார். உடனே அவர் "இனிமேல் பாட்டியிடம் தகராறு செய்தீர்கள் என்றால், நான் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வேன்" என்று விளையாட்டாக கூறிவிட்டு, வீட்டுக்குள் சென்றார். அங்கு சமையல் அறையில் இருந்த மண் எண்ணெயை வெளியே எடுத்து வந்த அவர், கைத்தான் கண் எதிரே தனது உடலில் ஊற்றி, தீக்குச்சியை பற்ற வைத்தார். பின்னர் அதை கையில் வைத்துக்கொண்டு, இனிமேலும் பாட்டியிடம் தகராறு செய்தீர்கள் என்றால், நான் தீ வைத்து தற்கொலை செய்துகொள்வேன் என, தன் தந்தை கைத்தானை பார்த்து நளினி மிரட்டினார். 
சாவு
அப்போது, தீக்குச்சியில் எரிந்துகொண்டிருந்த தீ எதிர்பாராதவிதமாக நளினியின் உடல் மீது பற்றிக்கொண்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத நளினி, உடலில் தீப்பற்றியதும் வலியால் அலறி துடித்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடல் கருகிய நிலையில் பெருந்துறை மருத்துவக்கல்லூரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் நளினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
-------

Next Story