கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது


கெங்கவல்லி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து;7 ஆயிரம் லிட்டர் பால் சாலையில் ஆறாக ஓடியது
x
தினத்தந்தி 22 Feb 2021 1:40 AM GMT (Updated: 22 Feb 2021 1:40 AM GMT)

தலைவாசல் அருகே கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 32), தனியார் நிறுவன பால் டேங்கர் லாரி டிரைவர்.

 இவர் நேற்று தம்மம்பட்டியில் உள்ள தனியார் நிறுவன பால் குளிரூட்டும் நிலையத்தில் இருந்து டேங்கர் லாரியில் 7 ஆயிரம் லிட்டர் பாலை லோடு ஏற்றினார். பின்னர் அவர் அங்கிருந்து காரைக்காலில் உள்ள தனியார் பால் குளிர்பதன கிடங்கிற்கு டேங்கர் லாரியை ஓட்டிச்சென்றார். கெங்கவல்லி அருகே தகரபுதூர் பகுதியில் உள்ள பாலத்தின் வழியாக வந்த போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் டேங்கர் லாரி கவிழ்ந்தது. 
இதில் டேங்கரின் மூடிப்பகுதி உடைந்து அதில் இருந்த பால் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அதே நேரத்தில் டிரைவர் சக்திவேல் இடிபாடுகளில் சிக்கி போராடினார். இதை அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து, இடிபாடுகளில் சிக்கி தவித்த டிரைவர் சக்திவேலை மீட்டனர். இருப்பினும் லாரியில் இருந்த பால் முழுவதுமாக சாலையில் கொட்டி வீணாகி விட்டது. இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story