விமான நிலைய வளாகத்துக்குள் புகுந்து என்ஜினீயரிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையர்கள்


விமான நிலைய வளாகத்துக்குள் புகுந்து என்ஜினீயரிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 22 Feb 2021 12:00 PM GMT (Updated: 22 Feb 2021 12:00 PM GMT)

விமான நிலைய வளாகத்துக்குள் புகுந்து என்ஜினீயரிடம் தங்க சங்கிலி பறித்த கொள்ளையர்கள், தப்பிக்க வழி தெரியாமல் தடுப்பு சுவரில் மோதி கால்வாயில் விழுந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஆலந்தூர், 

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் (வயது 29). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், பாரிமுனையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாம்பரத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென ஆண்ட்ரூசின் அருகே உரசுவதுபோல் வந்தனர். இதனால் பயந்துபோன ஆண்ட்ரூஸ், ஜி.எஸ்.டி.சாலையில் இருந்து விமான நிலையத்தில் உள்ள சர்வீஸ் சாலைக்கு வேகமாக சென்றார்.

அந்த வாலிபர்களும் விடாமல் அவரை பின்தொடர்ந்து வந்து ஆண்ட்ரூஸ் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில்தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்ட்ரூஸ், ‘திருடன் திருடன்’ என கூச்சலிட்டார்.

கால்வாயில் விழுந்தனர்

இதை கண்ட விமான நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மர்மநபர்களை விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டி வருவதை கண்டதும் பயந்துபோன வாலிபர்கள், விமான நிலைய வளாகத்துக்குள் புகுந்து ஆணையக கட்டிடங்கள் இருக்கும் பகுதிக்கு சென்றனர்.

ஆனால் அங்கிருந்து தப்பிச்செல்ல வழி தெரியாமல் மீண்டும் அதே வழியில் வந்தபோது தடுப்பு சுவரில் மோதி அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் விழுந்தனர். அப்போது அவர்களை விரட்டி வந்த போலீசார் 3 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.

கைது

இதுபற்றி விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் அவர்கள், சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), தேவன் (25), இம்ரான் (28) என தெரியவந்தது.

3 பேரையும் கைது செய்த விமான நிலைய போலீசார், இவர்களுக்கு வேறு ஏதாவது வழிப்பறி வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என விசாரித்து வருகின்றனர். சென்னை விமான நிலைய வளாகத்தில் சினிமா காட்சிபோல் நடைபெற்ற இந்த வழிப்பறி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story