ஜோலார்பேட்டை அருகே கட்டிட மேஸ்திரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


ஜோலார்பேட்டை அருகே கட்டிட மேஸ்திரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
x
தினத்தந்தி 22 Feb 2021 1:21 PM GMT (Updated: 22 Feb 2021 1:21 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே கட்டிட மேஸ்திரி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ஜோலார்பேட்டை

கட்டிட மேஸ்திரி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் குமரன் (வயது 30). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள அனேரியை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கிடையே நடந்த தகராறில் ரம்யா கடந்த 2014-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குமரனை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளி வந்த அவர் அஞ்சலி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து ெகாண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ரம்யா கொலை வழக்கில் இன்று  தீர்ப்பு வெளியாக இருந்தது.

ஓட ஓட விரட்டினார்

இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த குமரன் குளியலறைக்கு சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். மனைவி அஞ்சலி வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அதே நேரத்தில் குளியலறையிலிருந்து குமரன் வெளியே வந்தார். அஞ்சலி வேலை செய்து கொண்டிருந்ததால் அவர் தனது கணவரிடம் தண்ணீர் கொடுக்க கூறியுள்ளார்.

குமரனும் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தபோது எதிரே முதல் மனைவி ரம்யாவின் தம்பி ராஜிவ் (23) நின்றுள்ளார், குமரன் சுதாரிப்பதற்குள் ராஜிவ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்தார். 
உடனே குமரன் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியதில் குமரன் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்து இறந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததையொட்டி ஒலி பெருக்கி சத்தம் கேட்டதால் குமரனின் அலறல் சத்தம் வெளியே கேட்கவில்லை. இதற்கிடையே ராஜிவ் தப்பி ஓடி விட்டார்.

ஒரு மணி நேரத்தில் கைது

தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்்டர் பழனிமுத்து தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட குமரனின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அவருடன் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேலுவும் சென்றிருந்தார்.

போலீஸ் விசாரணையில் குமரனை வெட்டிக்கொலை செய்தது அவரது முதல் மனைவி ரம்யாவின் தம்பி ராஜிவ் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்த நிலையில் போலீசார் துரிதமாக செயல்பட்டு தப்பி ஓடிய ராஜிவை ஒரு மணி நேரத்தில் கைது செய்தனர்.
தனது அக்காள் கொலையில் தீர்ப்பு வெளிவர இருந்த நிலையில் தீர்ப்பு குமரனுக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என விரக்தியில் ராஜிவ் இருந்து வந்துள்ளார்.

பழிக்கு பழி

இதனால் குமரனை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறியுள்ளார். அக்காளை கொன்ற வழக்கில் பழிக்கு பழியாக குமரனை அவரது மைத்துனரே ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story