கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர்


கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த ஒன்றிய கவுன்சிலரின் கணவர்
x
தினத்தந்தி 22 Feb 2021 3:51 PM GMT (Updated: 22 Feb 2021 3:51 PM GMT)

கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடைக்கானல்:
கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
ஒன்றிய கவுன்சிலர்
கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி குறிஞ்சிநகரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி காந்திமதி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்ற சந்திரன், அதன்பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது மனைவி காந்திமதி, தனது கணவரை உறவினர், நண்பர்களின் வீடு என பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து கணவர் மாயமானது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் காந்திமதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 
பிணமாக மீட்பு
இந்தநிலையில் நேற்று காலை நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையிலான போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் ஏரியில் மிதந்த நபரின் உடலை மீட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில், ஏரியில் பிணமாக மிதந்தவர் சந்திரன் என்பது தெரியவந்தது. பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்திரன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை ஏரியில் தள்ளிவிட்டதில் இறந்துபோனாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
மாயமான முன்னாள் ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் கொடைக்கானலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story