முத்துப்பேட்டையில் பயங்கரம் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை


முத்துப்பேட்டையில் பயங்கரம் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து கொலை பழிக்குப்பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Feb 2021 5:56 PM GMT (Updated: 22 Feb 2021 5:56 PM GMT)

முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முத்துப்பேட்டை:-
முத்துப்பேட்டையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். அவர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
ஒன்றிய கவுன்சிலர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது38). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் முத்துப்பேட்டை ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வந்தார். 
இவர் மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் வழியாக ஆலங்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ஓட, ஓட விரட்டினர்
முத்துப்பேட்டை பேரூராட்சி குப்பைக்கிடங்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களிடம் இருந்து ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயற்சி மேற்கொண்டார். 
ஆனால் அந்த கும்பல் ராஜேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காரை கொண்டு இடித்தது. இதனால் நிலை தடுமாறி அந்த பகுதியில் உள்ள வாய்க்காலில் ராஜேஷ் விழுந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய அவரை, அந்த கும்பல் ஓட, ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பின்னர் ராஜேசின் தலையை அந்த கும்பல் துண்டித்து கைலியில் சுற்றி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர். 
சாலையில் விழுந்த தலை
அந்த மோட்டார் சைக்கிள் முத்துப்பேட்டை அருகே ஆசாத்நகர் வேகத்தடையில் சென்றபோது தலை சாலையில் விழுந்தது. இதை கண்டு பதைபதைத்து போன அந்த பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து, கொலையாளிகள் தலையை அங்கேயே விட்டு விட்டு தப்பினர். 
தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் மற்றும் போலீசார் வெவ்வேறு இடங்களில் கிடந்த ராஜேசின் தலை மற்றும் உடலை கைப்பற்ற சென்றனர். ஆனால் சிலர் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஆலங்காடு வழியாக சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.
திருச்சி மண்டல ஐ.ஜி. ஜெயராம், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் துரை (திருவாரூர்), ஸ்ரீநாத் (மயிலாடுதுறை) ஆகியோர் கொலை நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் கிடந்த கைத்துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இறந்த ராஜேஷ் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஒன்றியக்குழு கவுன்சிலர் ஆனார். பின்னர் அவர் அ.தி.மு.க. வில் சேர்ந்து பணியாற்றி வந்தார். அவருக்கு திருமணமாகி பேபி (28) என்ற மனைவியும், 8 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.
பழிக்குப்பழியாக நடந்ததா?
முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூரை சேர்ந்த வீரபாண்டியன் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மதன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
அதே ஆண்டு நவம்பர் மாதம் மதன் படுகொலை செய்யப்பட்டார். இதில் ராஜேஷ் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் பழிக்குப்பழியாக ராஜேஷ் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை காரணமாக அந்த பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் ராஜேசின் உடலை வாங்க மறுத்து நேற்று மாலை அவருடைய உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மன்னார்குடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்திலும் சாலை மறியல் நடந்தது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

Next Story